போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில் இந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சிலருக்கு சில மருத்துவ காரணங்களினாலும் (estrogen and progesteron குறைவினால்) உளவியல் காரணங்களினாலும் அதுவே மிகப் பெரிய மன அழுத்ததை கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை. இந்த மன அழுத்தம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டி விடும் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

'போஸ்ட்பார்டம் ஸைக்கோசிஸ்' (Postpartum Psychosis) என்று அழைக்கப்படும் இந்த வகையான மன அழுத்தம் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?. பேறுகாலத்திற்குப் பின் சில பெண்களுக்கு சில பல காரணங்களினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.

ஒன்று சாதாரண மன உளைச்சலுடன் ( postpartum depression) கூடிய மன அழுத்தம். மற்றொன்று, இந்த சாதாரண மன உளைச்சல் அதிகமாகி, அதன் விளைவாக ஏற்படும் போஸ்ட்பார்டம் ஸைக்காசிஸ் என்கிற மன நோய். இந்நோய் மகப்பேற்றிற்குப் பின், ஆயிரம் பெண்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படுகிறது. இந்த மன நோயால் பாதிக்கப்படும் பெண்களில் ஐந்து சதவீதம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தலாவது சம்பவம் நடந்தது 1989ல். எங்கள் வீட்டு கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை பார்த்த பெண், கட்டிட மேஸ்திரியின் ஆசை வார்த்தையில் மயங்கி, கர்பமாகி பின் கருவை கலைத்து விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது. கணவன் இந்தப் பெண்ணை தினக்கூலிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட, அது வரை அவள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில நாட்களிலேயே கணவருக்கு இவரின் கடந்த கால வாழ்க்கை தெரிய வர, கர்பமாக இருந்தவள் மீது சந்தேகம் வந்து வயிற்றில் வளரும் குழந்தை தனது இல்லை என்று கூறி விட்டு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார்.

குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், கணவனையும் எந்த விதத்திலும் சமாதானம் செய்ய முடியவில்லை என்ற கவலை எல்லாம் சேர்ந்து அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. குழந்தை பிறந்தவுடன் அவரால் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தையை கவனிக்காமல் வெறுக்கத் தொடங்கிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், உறவுக்காரர்களும் அவமானப் படுத்தும் படியாக பேச ஆரம்பித்தவுடன் மிகுந்த மன அழுத்திற்கு ஆளாகி 'போஸ்ட்பார்டம் சைக்காசிஸ்' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டார்.

கணவரின் அன்போ பிறந்த வீட்டின் போதுமான ஆதரவோ இல்லை. வீட்டில் உள்ளவர்களோ இவளுக்கு பேய் பிடித்து விட்டது, சூனியம் வைத்து விட்டார்கள் என்று கூறி மாயாஜால வித்தைகள் தான் செய்தார்களே ஒழிய அவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை கொடுக்கவில்லை. மன நோய் தீவிரமாகி, ஆறு மாதம் கழித்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்ற வாரம் நடந்த மற்றொரு சம்பவம். உறவுக்காரப் பெண் ஒருவர் சொந்த மாமனையே திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்ததும், பெற்றோர்கள் உட்பட பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். முன்னோர்களில் பெரும்பாலானோர் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி தடுத்துப் பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை.

முதல் குழந்தை ஆரோக்கியமாகவே பிறந்தது. நான்கு மாதத்திற்கு முன்னர் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை அரோக்கியமாக இல்லை. குழந்தையின் உடலில் பல கோளாறுகள். உறவில் திருமணம் செய்து கொண்டது (Inbreeding) குழந்தையின் உடல் நிலைக்கு ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவர்கள் கூறியதும் இந்தப் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

வீட்டில் இருந்தவர்கள் அதே தாயத்தும், மந்திரிப்பதும் என இருந்திருக்கிறார்களே தவிர ஒரு மனநல நிபுனரிடம் ஆலோசனை கேட்கவில்லை. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப் பட வேண்டிய நிலையிலும், நோயின் தீவிரம் தெரியவில்லை. சரியான ஆலோசனை இல்லாமல், மன உளைச்சலை பகிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப ஒரே எண்ணங்களை மனதில் வளர்த்து, சென்ற வாரம் அந்த பெண், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததும் ஆடிப்போய் விட்டேன். தில்லியில் இருந்து ஒரு வருடம் முன்பு தான் கோவைக்கு இடம் மாறினார்.

இந்நோய்க்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில காரணங்கள்:
1)முதன்மை காரணம் பேறு காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம்.
2)குழந்தைப் பிறப்பிற்கு பின் பெண்களுக்கு தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் மன அழுத்தம். 
3) தான் தாயாக இருக்க தகுதியானவரா என்ற பயம்.
4) குழந்தை பிறந்த பின் ஏற்படும் செலவுகளை நினைத்து பயம்.
5) குழந்தையை பார்த்துக் கொள்வதினால் ஏற்படும் சலிப்பு, உடல் சோர்வு.

இந்த நோயினால் பாதிக்கப் பட்ட பெண்கள் பலர் மேலே கூறிய எண்ணங்களை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது.

கர்ப்பிணி / பிரசவித்த பெண்களின் மன அழுத்தம் என்பது இன்றும் உணரப்படாத ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வு படித்தவர்களிடையே கூட மிகக் குறைவு தான். கர்பகாலத்தில் சாதாரண மன அழுத்தம் 16%ல் இருந்து 20% பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பிருந்தாலும் அதற்கு தேவையான ஆலோசனை வழங்கப் படுவதில்லை. பெண்களும் தங்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வதில்லை.

மன நல நிபுணரை ஆலோசனைக்காக அணுகுவது என்பது இன்றும் நம்மிடையே ஒரு வித தயக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தின் பார்வை என்கிற போலியான கட்டமைப்புக்காய் தாங்களே தங்களின் மீது தேவையற்ற சுய தடைகளை விதித்துக் கொண்டு அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் சரியான தீர்வுகாணாமல், பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் மூட நம்பிக்கைகளை கட்டி அழுது கொண்டு இருக்கிறோம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்லி அழுவது.....

இதைப்படிக்கும் உங்களில் சிலரேனும் உங்களின் தங்கையோ, தமக்கையோ, தாரமோ இல்லை ஏன் உங்களின் சுற்றத்தில் ஒரு சக பெண்ணுக்கு இத்தகைய ஒரு நிலை வருமாயின் அங்கே தேவைப்படும் விழிப்புணர்வினை உருவாக்கிட உதவுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோளும், இந்த பதிவின் நோக்கமும்.

டாக்டரம்மாவுக்கு ஒரு வேண்டுகோள் - நான் சொல்லி இருக்கிற தகவல்கள் எந்த காலத்துலயோ பாடத்துல படிச்சது.... ஏதாவது தப்பு இருந்தாலோ, சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்கள் விட்டுப் போயிருந்தாலோ நீங்க சொல்லுங்க டாக்டரம்மா... நீங்க இன்னும் தெளிவா சொல்லலாம்..
மேலும் படிக்க...

Comments