அழகுக் குறிப்புகள்!!


‘சண்டே’ ஸ்பெஷல்
அழகில்லாதவர்கள் என்று எவரும் இந்த உலகத்தில் இல்லை; அழகாகத் தோற்றமளிக்கத் தெரியாதவர்கள்தாம் இந்த உலகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். முதலில் நாம் அழகாக இல்லை; பர்சனாலிடியாக இல்லை என்று கருதும் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்து விடுங்கள்.
எப்போதும் டென்ஷன்… டென்ஷன் என்று குழம்பிக் கொண்டிராமல் தியானம் செய்யப் பழகுங்கள். இது உடலுக்கும், மனத்திற்கும் நன்மையளிக்க கூடியது.
வாரம் ஒரு முறையாவது மனத்திற்குப் பிடித்த நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசினால் மனப்புழுக்கம் குறையும். சுமை குறைந்த நிம்மதி ஏற்படும்.
விடுமுறை நாளில் வாரம் ஒரு முறை தன் பர்சனாலிடியைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கீழ்க்கண்ட அட்டவணைப்படி செய்யலாம்.
காலை எழுந்து, ஆற அமர காபி குடித்துவிட்டு, செய்தித்தாள் படித்துவிட்டு, டி.வி. பார்த்துவிட்டு, ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். (தோட்டத்தை சுத்தம் செய்தல், வீட்டைச் சுத்தம் செய்தல்கூட உடற்பயிற்சிதான்) பிறகு இரு பிரட் ஸ்லைஸ் உண்டுவிட்டு, ஒரு கப் எலுமிச்சைச் சாற்றில் அரை ஸ்பூன் தேன்விட்டு அருந்த வேண்டும். சுமாரான மெலிதான உடை அணிந்து கொள்ள வேண்டும். கை, கால், விரல் நகங்களை சுத்தப்படுத்திவிட்டு தாங்கக்கூடிய சுடு நீரிலே கை கால்களை வைத்திருத்தல் வேண்டும். பின்னர் கை, கால்களை வெளியே எடுத்துக் துடைக்க வேண்டும். அடுத்து உடல், தலைமுடி முழுவதும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுள் ஏதாவது ஓர் எண்ணெயைத் தடவி, ஒரு மணி நேரம் ஊறிய பின், வீட்டில் தயாரிக்கப்பட்ட சிகைக்காய் அல்லது தரமான ஷாம்பூ கொண்டு தலையை அலசிக் குளிக்க வேண்டும். பின்னர் காய்கறிகளை மிகுதியாகவும், சாதத்தைக் குறைவாகவும் சாப்பிட வேண்டும். பிறகு அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். நான்கு மணிக்கு சற்று உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். பின்னர் அடுத்த வாரத்திற்கான வேலைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்; உடைகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இரு திரெட்டின் பிஸ்கட், ஒரு கப் டீ உட்கொள்ள வேண்டும். பின் நண்பர்களுடன் உரையாடுதல் அல்லது தொலைக்காட்சி பார்த்தல், புத்தகங்கள் படித்தல் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ளலாம். பிடித்த இசையைக் கேட்டபடியே வேலைகளைச் செய்வது அலாதியானது. அதற்குப் பிறகு உலாவச் செல்ல வேண்டும். 20 நிமிட தியானம் செய்ய வேண்டும். இரவில் இரு சப்பாத்தி, ஒரு கப் கொழுப்பில்லாத சூடான பால் அருந்திவிட்டுப் படுக்கச் செல்ல வேண்டும்.
இப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமையைச் செலவிட்டுப் பாருங்கள். அதனால் உங்கள் மனமும், உடலும் எவ்வளவு புத்துணர்ச்சியோடு செயல்படும் தெரியுமா, பின்பு அடிக்கடி ஞாயிறு வராதா என்று ஏங்க ஆரம்பித்து விடுவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!
அழகுக்கூடும்..
Source : http://www.tamilvanan.com/content/20080530-beauty-tips/

Comments