நான் கடவுளா??!!


இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள் ,இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்).
கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,ஆஸ்திகர்கள்,நாஸ்திகர்கள்,ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக,பலர் ஆஸ்திகர்கள்,என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவர்களுக்கு இந்த பதிவு.ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன்.
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.நாளடைவில் அதற்குப் பல்வேறு முகங்கள் ஏற்பட்டு விரிவடைந்திருக்க வேண்டும்.சடங்குகளை ஏற்படுத்தி அதை தொடர்வதால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் ஏற்பட்டு விட்டது இப்போது.
கடவுள் இருக்கிறாரா இல்லையா?என்று யோசிக்கக் கூடத் தயாராக இல்லை பலர்.என் நண்பர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்"என்று கொதித்தார்.sensitive விஷயம்.
எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்?அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை என்கிறார்கள் .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.
சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை.இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட.சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.மனோ சக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது.ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.
இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்டது இப்போது.அதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வழிமுறைகள் மருவி வெறும் சடங்காக மாறி விட்டது.கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று.


Comments

  1. If you are really interested in knowing about if there is God or not check with one who is in his death edge desperating crying for help and no know one is around.

    Doesn't matter if that person is a beleiver of god or not.
    Any man could say I am the super power until he faces some trouble beyond his power.

    I agree with your saying about the power you could feel in an age old temple which you could feel lacking in a new temple.

    ReplyDelete
  2. இதேதான், அனேகமாக எனது கருத்தும், கடவுள் என்பதை நமக்கு ஒய்வு தேவைப்படும் பொழுது சாயும் ஒரு தூணாக இருந்த வரை அல்லது நமது சங்கடங்களின் போது பாரம் தாங்கி கல்லாக இருந்த வரை அல்லது நமது சந்தோஷங்களை பகிர்பவராக இருந்த‌ வரை எல்லாம் சரியாக இருந்தது எப்பொழுது நாம் எல்லாவற்றிற்கும் கடவுளையே தொல்லை செய்ய ஆரம்பித்தோமோ அங்கு ஆரம்பித்தது திருடர்களின் வரவு.. சாமியார்களின் வரவு..

    ஒரு கதை உண்டு.. ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு காட்சியை காண்கிறான்.. ஒரு மிகவும் வயதான் நரி ஒன்று மிகவும் பசியோடு வந்து கொண்டிருந்தது, இவன் அதை கண்டதும் பயத்தில் மரத்தில் ஏறி விட்டான்.. நரி மிகவும் சோர்வாக மரத்தினடியில் படுத்து விட்டது.. அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு புலி ஒரு மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்து.. அவ்விடத்தில் வைத்து தின்றுவிட்டு சென்றது.. மீதமிருந்ததை நரி தின்றது...

    இதைக் கண்ட மனிதன் நினைத்தானாம்.. ஹும் கடவுள், ஒவ்வொரு உயிரின் தேவையையும் நிறைவேற்றுகிறார்.. பிறகு நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்று, உடனே அவன் ஒரு தீர்மானம் செய்தானாம் நான் இந்த மரத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். . எனக்கான உணவை கடவுள் ஏற்பாடு செய்வார் என்று... இரண்டு நாடகள் கடந்தன.. ஆறு நாடகளாகியும் இவனது உணவு வந்து சேராததால்.. அவன் இறந்து கடவுளிடம் போனான்.. அவன் மிகுந்த கோபத்துடன் கடவுளை கேட்டான் " நீங்கள் ஏன் என்னை காக்கவில்லை" என்று... கடவுள் சொன்னாராம் " நான் உன்னை புலியாக படைத்தேன்.. நீயோ உன்னை நரியாக நினைத்து உன்னை அழித்துக் கொண்டாய் " என்று

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.