நோயற்ற உடலில் நோயற்ற உள்ளம்- என்பதே கல்வியின் லட்சியம்???.

நோயற்ற உடலில் நோயற்ற உள்ளம்-
என்பதே கல்வியின் லட்சியம்.
--- லத்தீன் வாசகம்.


சமீபத்தில் அமெரிக்காவில் பொறியாளர் வேளையை இழந்த இந்தியர் தன் மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் கொடுரமான முறையில் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

மற்றொரு இந்தியர் ஷேர் மார்க்கெட்டில் போட்ட பணமெல்லாம் திவாலாகிப் போக தன் மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் ஆக நான்கு பேர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார்.

இப்படி திடீரென செய்யப்படும் கொடுரமான கொலைகள் திட்டமிடப்பட்டும் செய்யப்படவில்லை. சாராசரியாக நம்மைப் போன்று தன் குடும்பத்தினரை நேசித்து, குழந்தைகளை பராமரித்த கல்வி அறிவுள்ள மனிதனுக்குள் எப்படி இப்படியொரு வக்கீரமம் சீண்டுகின்றது? ஒருமுறை கத்தியால் குத்தும் போதே பீறிட்டொழும் ரத்தத்தில் நெஞ்சம் பதறாதா? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. எப்படி தன் குழந்தைகளை கொல்லும் அளவுக்கு மனஅழுத்தங்கள் ஏற்படுகின்றன.

இப்படி பல சம்பவங்கள். படிக்கும் போதே சில நிமிடங்கள் திக்கென்று இருக்கின்றது. சம்பவங்களைச் சுற்றியே மனம் சுழல்கிறது. கொலை செய்தவன் இடத்தில் இருந்தும், கொலை செய்யப்பட்டவர்கள் இடத்திலிருந்தும் சிந்திக்கத் தூண்டுகின்றது. மனிதர்கள் மிருகமாகிப் போகும் சூழல்களை ஆராயத் தோன்றுகின்றது.  எங்கேயோ இருக்கும் கோபங்கள், நிராகரிக்கப்பட்ட வலிகள், எதிர்காலம் குறித்த பயங்கள், உறவுகளின்
விமர்சனங்கள்... எதை எதையோ நினைத்துக் குழப்பிக் கொண்டு மன அழுத்ததிற்குள்ளாகுவது. அமெரிக்காவில் வாழ்ந்த பொறியாளர் கூட மிகக் கொடுரமான முறையில்  தன் குழந்தைகளையும், மனைவியையும் சாகடித்திருக்கிறார். தன் மனைவியின் தலையிலும், கழுத்திலும் மட்டும் 32- கத்திக் குத்தினால் ஆழமான துவாரங்களை ஏற்படுத்தி முகத்தைச் சின்னாபின்னமாக்கி இருக்கிறார். மனைவி இறந்த பிறகும் கூட பிணத்தை தாக்கிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் என்று மருத்துவம் கூறும்போது  அவரின் மனநிலை எந்தளவு இருந்திருக்கக் கூடும்.

தன்னை வேலை நீக்கம் செய்யப்பட்ட காரணத்தை மட்டும் முன் வைத்தே படுகொலைகள் நடத்தியிருப்பது விரக்தியின் உச்சக்கட்டமா? மாற்று வழிகளை செய்ய இயலாதவண்ணம் முடக்கப்பட்டு குடும்பத்தினரிடம் வன்முறையை நிகழ்த்தியிருக்கும் இவரும் மற்றும் இன்னும் பலர் என சமூகத்தில் நிகழ்வுகள் இனியும் நடந்துக் கொண்டுதானிருக்கும்.

பாரம்பரியத்தினால் உடல்வாகும், உள்ளத்தின் இயல்புகளும், அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விட்டாலும் இளம் பிராயத்துச் சூழ்நிலையால் மனிதனின் தன்மை பெரிதும் தாக்கம் ஏற்படுவது ஒருமுறை. கல்வியும், பயிற்சிகளும், நல்லுணர்வுகளையும் ஆழ்மனத்தில் இருக்கும் மனிதனின் இயற்கைப் பண்புகளை அழுத்திவிடுகின்றன. படித்த படிப்பும் பெற்ற பயிற்சியும் கல்வி தகுதிகளும் திடீரென தறி கெட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்குள் விரும்பத்தகாத நிகழ்வுகளை நடத்திவிடுகின்றது.


இதில், "படித்த பட்டதாரிகள் கூட...." என்ற வாக்கியம் ஒதுக்கப்பட வேண்டியதாகிறது.


மனிதர்களின் ஆழ்மன உணர்வுகளை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த மனஇயல் அறிஞர் ஸிக்மண்ட் ஃப்ராய்டு  சைக்கோ அனாலசிஸ் பற்றி
அழகாக ஒரு விளக்கம் சொல்கிறார் :

மனிதர்களுக்கு நான்கு வகைகளில் அறிவு கிடைக்கின்றது.

1. தன்னைப் பற்றியே அறிந்துள்ள அறிவு.
எண்ணங்கள், உணர்ச்சிகளின் வலிமைகள், குறைபாடுகளை இதில்
சேர்க்கிறார்.

2. தனக்கு வெளியே காட்சி தருகிற உலகத்தைப் பற்றியும், மனிதர்கள் உள்ளிட்ட உயிர்க் குலத்தைப் பற்றியும் அறிந்துள்ளவைகள்.

3. வெளியுலகமும், பிற மனிதர்களும் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கள். (பிறருடைய பாராட்டுக்கள், வெறுப்பு, பகைமை, அன்பு முதலியவற்றை இவற்றுடன் சேர்க்கிறார்.

4. வெளியுலகமும், பிற மனிதர்களும் தங்களைப் பற்றியே தெரிவித்துள்ள எண்ணங்கள் முதலியன.


இவ்வாறாக திரட்டிய அறிவின் துணைக் கொண்டுதான் தனி மனிதன் உலகத்தில் செயல்படுகிறான். அவன் வாழ்க்கைச் சூழல்களையும் அமைக்கின்றான் என்கிறார் ஸிக்மண்ட் ஃப்ராய்டு.


வெளி நிகழ்வுகள், நாம் தொடர்பு கொள்பவர்களின் மூலம் நமக்குள் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சிந்தனைகளில் ஏற்படும் எண்ணச்சுழற்சிகள், உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்கிறது. உடலின் உள்ளுறுப்புகள் நிலை தளர்கின்றன. உயிர்ப்பு செரிமானம் இரத்த ஓட்டம் சுரப்பிகள் தாறுமாறாக நடைப்பெறும் போது அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அந்த அசம்பாவிதங்கள் ஏற்படுத்தும் பதற்றத்திற்கு மூலகாரணங்களும் கூட ஒருவித பயஉணர்வின் உந்துதலே.

இவற்றிற்கெல்லாம் தீர்வுகள் கண்டுபிடித்துவிட முடியாது என்பதே என்னுடைய அபிப்பிராயம்.  சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் கொடுரங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. நம்முடனும், நமக்குள்ளும் சைக்கோக்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒருவேளை நாமும் இவர்களைப் போல் மாறும் சூழல்கள் வருமா? என்று சிந்திப்பதுண்டு.


"தன்னைக் கட்டுப்படுத்தியவனே அறிஞன்." - ஆத்மஜயம் என்பது சித்தத்தை அலையற்ற கடலாக அமைதியுறச் செய்வதேயாகும். அதுவே பெய்பொருள் என்கிறது ஆன்மீகம்.


எல்லை மீறிய சினம், வரம்பு கடந்த பொறாமை, அளவற்ற பேராசை - இவற்றால் வசப்பட்ட மனிதனை, ´தற்காலிகப் பைத்தியம்´ என்று உளவியல் சொல்கிறது.

நானும் சில நேரங்களில் ´தற்காலிகப் பைத்தியமாக´ இருந்திருக்கிறேன். நீங்கள்...

Comments