வாய் விட்டுப் கேளுங்கள் . மனம் விட்டுப் பேசுங்கள்

உறவுகளானாலும் சரி , நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன . பலம் பெறுகின்றன . மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும் , சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன . பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன ; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன .
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது .
ஒரு இராணுவ வீரனும் , ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் . மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது . அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி . இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள் . போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா ?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான் . விமானதளத்தில் அவன் மனைவியும் , மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள் . மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன் . அவன் கண்ணிலும் , மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் .
வீடு திரும்புகிறார்கள் . கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும் , தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள் .
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான் . " அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய் ?"
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான் . " நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை "
வீரன் மகனைக் கேட்கிறான் . " பின் யார் அப்பா ?"
" தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார் . அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார் . படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார் . அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள் "
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது .
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள் . அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை . அவளை அவன் தொடவில்லை . அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான் . இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள் .
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான் . " இதோ என் அப்பா "
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது . தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது , மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான் .
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும் , துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான் .
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம் . மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம் . இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும் . ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான் . மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம் . அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள் . ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல் , மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா ?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும் , தவறாக ஆக்கி விடுவதும் சுலபம் . சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும் . இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும் , நட்புகளும் , சந்தோஷங்களும் தான் .
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள் . முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள் . நீங்களாக அனுமானிக்காதீர்கள் . அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள் . அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள் .
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி , நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள் . அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம் . அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ , மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா ? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது . அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது .
எனவே நீண்டநாள் ஆழமான நட்பும் , உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள் - வாய் விட்டுப் கேளுங்கள் . மனம் விட்டுப் பேசுங்கள் .
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு  ! !

Comments